Search This Blog

Friday, January 10, 2014

ஒரு மனைவியின் சாகசம்-இடாலோ கால்வினோ

ஆங்கில மொழிபெயர்ப்பு: வில்லியம் வீவர்
தமிழில்: ஆர். சிவக்குமார்.

இடாலோ கால்வினோ 1923 ஆம் ஆண்டு கியூபாவிitalo-calvino-bw1-frmல் பிறந்தார்.இத்தாலியில் வளர்ந்தார். இவர் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தியநாவலாசிரியர்களில் தலை சிறந்தவராகக்  கருதப்படுகிறார். இவர்எழுதியுள்ள முக்கியமான நூல்கள்: தி காஸ்ட்ல் ஆப் க்ராஸ்ட் டிஸ்டினீஸ்(நாவல், 1973), இன்விஸிபில் சிட்டீஸ் (1972), டிபிக்கல்ட் லவ்ஸ்(சிறுகதைகள், 1984), ரோட் ஆப் சன் ஜியோவன்னி (1994) மற்றும் அன்டர் த ஜகர்ஸன் (1992).

திருமதி ஸ்டெஃபனியா ஆர். காலை ஆறு மணிக்குத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தாள். அதுதான் முதல் தடவை.
கார் அவளுடைய வீடு இருந்த கட்டடத்திற்கு முன்பாக இல்லாமல் சற்று முன்னாலேயே திருப்பத்தில் நின்றது. அந்த இடத்தில் தன்னை விட்டுவிடும்படி அவள்தான் ஃபர்னெரோவை கேட்டுக்கொண்டாள்; ஏனென்றால், கணவன் ஊரிலில்லாத சமயத்தில் அதிகாலையில் ஓர் இளைஞனுடன் அவள் வீடு திரும்புவதைக் காவலாள் பார்ப்பதை அவள் விரும்பவில்லை. என்ஜினை நிறுத்தியவுடன் ஃபர்னெரோ அவளைத் தன் கையால் அணைக்க முற்பட்டான். வீடு அருகிலிருந்தமை எல்லாவற்றையும் மாற்றிவிட்டதைப் போல ஸ்டெஃபனியா அவனிடமிருந்து சட்டென பின்னகர்ந்தாள். காரிலிருந்து அவசரமாக வெளியேறிய அவள், காரைக் கிளப்பிக்கொண்டு போய்விடும்படி ஃபர்னெரோவுக்குக் குனிந்து சைகை செய்துவிட்டு, கோட்டின் கழுத்துப்பட்டியில் முகம் புதைந்திருக்க வேகமாக
நடக்க ஆரம்பித்தாள். அவள் தன் கணவனுக்கு துரோகம் செய்பவளா? கூட்டுக் குடியிருப்புகள் நிறைந்த அந்தக் கட்டடத்தின் பிரதான கதவு இன்னும் பூட்டியே இருந்தது. ஸ்டெஃபனியா இதை எதிர்பார்க்கவில்லை. அவளிடம் சாவி இல்லை. சாவி இல்லாததனால்தான் முந்தைய இரவை அவள் வெளியே கழித்தாள். நடந்த கதை அதுதான். இரவின் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதைத் திறக்க நூறு வழிகள் இருந்திருக்கலாம்; அல்லது தன்னிடம் சாவி இல்லை என்பது முன்னதாகவே அவளுக்கு நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவே இல்லை; வேண்டுமென்றே அவள் அப்படி செயல்பட்ட மாதிரி இருந்தது. இரவு உணவுக்கும் திரும்பிவிட முடியும் என்று அவள் நினைத்ததால் சாவி இல்லாமலேயே பிற்பகலில் வீட்டைவிட்டுக் கிளம்பினாள். ஆனால் அவள் பல காலம் பார்க்காதிருந்த அவளுடைய பெண் நண்பர்களும், அவர்களின் ஆண் நண்பர்களும் முதலில் இரவு உணவுக்கும், பின் குடிக்கும், நடனத்திற்கும் என்று அவளை ஒவ்வொருவர் வீடாக இழுத்தடித்தனர். விடியற்காலை இரண்டு மணிக்குத் தன்னிடம் சாவி இல்லையென்பது நினைவுக்கு வந்தபோது மிகவும் தாமதமாகிவிட்டது. அதற்கெல்லாம் காரணம், அந்த ஃபர்னெரோவுடன் அவள் கொஞ்சம் காதல் வயப்பட்டிருந்ததுதான். காதலா? கொஞ்சம் கூடுதல் குறைச்சலில்லாமல் விஷயங்களை உள்ளவாறே பார்க்க வேண்டும். அவனுடன் அந்த இரவை அவள் கழித்திருந்தாள்,உண்மைதான். ஆனால் அப்படிச் சொல்வது மிகை; அப்படிச் சொல்வதுசரியுமல்ல. அவள் வசித்த கட்டடத்தின் கதவு திறக்கப்படுவதற்கான நேரம்வரை அவனுடைய தோழமையில் அவள் இருந்தாள். அவ்வளவுதான். ஆறுமணிக்குத் திறந்துவிடுவார்கள் என்று நினைத்து வீடு திரும்ப அவள் அவசரப்பட்டாள். ஸ்டெஃபனியா இரவை வெளியே கழித்ததை ஏழு மணிக்கு வரும் துப்புரவு செய்யும் பெண் தெரிந்து கொள்வதையும் அவள் விரும்பவில்லை. அவளுடைய கணவன் வேறு இன்று வீடு திரும்புகிறான்.
கதவு இன்னும் திறக்கப்படாமலிருப்பதைக் கண்டாள். ஆளரவமற்ற தெருவில் அவள் மட்டும்தான் இருந்தாள். எல்லாவற்றையும் உருப்பெருக்கிக் காட்டுவது போன்ற அந்த அதிகாலை ஒளியில் அவள் பகலின் வேறெந்தநேரத்தை விடவும் துலக்கமாகத் தெரிந்தாள். ஒரு கலக்க உணர்வு சுரீரென்று அவளை உறைத்தது; கணவன் அருகில்,அவன் அரவணைப்பில் ஒவ்வொரு நாள் அதிகாலையிலும் அனுபவிக்கும் நீண்ட ஆழ்ந்த தூக்கத்துக்கு அவள் ஏங்கினாள். இந்த ஏக்கம் ஒரு கணம்தான்; குறைவாகக்கூட இருக்கலாம். அந்தக் கலக்கத்தைத் தான் உணர்வோம் என்று அவள் எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் உண்மையில் அவள் அதை உணரவேயில்லை. காவலாள் வெளிக்கதவை இன்னும் திறக்காமலிருந்தது சலிப்பூட்டியது. ஆனாலும் அந்த அதிகாலைக்காற்றிலும், அந்த நேரத் தனிமையில் இருப்பதில் உண்டான ரத்த ஓட்டத்துள்ளலிலும் ஒருவகையான பரவசம் இருக்கத்தான் செய்தது .ஃபர்னெரோவை அனுப்பிவிட்டதில் அவளுக்கு வருத்தம் ஒன்றுமில்லை;அவன் அருகில் இருந்திருந்தால் அவள் கொஞ்சம் பதற்றத்துடனேயே இருந்திருப்பாள். மாறாக, தனியாக இருந்ததில் அவள் வேறுவகையாகஉணர்ந்தாள். சிறுபெண்ணாக இருந்தபோது உணர்ந்ததை அது கொஞ்சம் ஒத்திருந்தாலும் முற்றிலும் வேறானது.
இரவை வெளியே கழித்ததில் அவளுக்குக் கொஞ்சமும் குற்றஉணர்வில்லை. இதை அவள் ஒத்துக்கொண்டேயாகவேண்டும்.அவளுடைய மனசாட்சி சுமையின்றி இருந்தது. அது கவலையற்றுஇருந்தது. இப்போது அந்தச் செயலைத் துணிந்து அவள்மேற்கொண்டுவிட்டதாலா? அல்லது கடைசியில் அவள் தன்னுடைய தாம்பத்ய கடமைகளை ஒதுக்கி வைத்து விட்டதாலா? அல்லது அதற்கு மாறாக, எல்லாவற்றையும் மீறி ஆசையை எதிர்த்து நின்று தன்னுடைய தாம்பத்ய விசுவாசத்தைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டதாலா?ஸ்டெஃபனியா தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். இந்த குழப்பமும்,உறுதியற்ற நிலையுமே காலை நேரக் காற்றின் குளிர்ச்சியுடன் சேர்ந்துஅவளைக் கொஞ்ச நேரம் திடுக்குற வைத்தன. அவள் தன்னைஒழுக்கங்கெட்டவள் என்று கருதுவாளா, இல்லையா? தன்னுடைய நீண்டகோட்டின் பாக்கெட்டுகளில் கைகளை நுழைத்துக்கொண்டு அவள்முன்னும் பின்னுமாகக் கொஞ்ச நேரம் நடந்தாள். ஸ்டெஃபனியாவுக்குக் கல்யாணமாகி இந்த இரண்டு வருடங்களில் கணவனுக்குத் துரோகமிழைப்போம் என்று அவள் ஒருபோதும் நினைத்ததில்லை. கல்யாணமான ஒரு பெண் என்ற முறையில் ஏதோ ஒரு மாதிரியான எதிர்பார்ப்பு அவளுக்கிருந்தது; ஏதோ ஒன்று அவளுக்குக் கிடைக்காதது போன்ற உணர்வு அது. தன் சிறுபெண்தனத்திலிருந்து அவள் முழுமையாக இன்னும் விடுபடாதது போல இருந்தது. ஊர் உலகத்தின் முன் கணவனுக்கு சமதையாக ஆகும்படி, அவனைச் சார்ந்து வாழும் ஒரு புதிய சிறுபெண்தனத்திலிருந்து அவள் வெளியேற வேண்டும். அவள் இதுநாள் வரை காத்துக்கொண்டிருந்தது இந்த ஒழுக்கக் கேட்டுக்குத்தானா? ஃபர்னெரோ ஓர் ஒழுக்கங்கெட்டவனா? இரண்டு கட்டடங்கள் தாண்டி சாலையின் எதிர்புறமிருந்த ஒரு மதுபான விடுதி திறந்திருப்பதை அவள் பார்த்தாள். உடனடியாக அவளுக்கு ஒரு சூடான காஃபி தேவைப்பட்டது. விடுதியை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஃபர்னெரோ ஒரு சிறு பையன். அவனைக் குறித்து பெரிய வார்த்தைகளை உபயோகிப்பதை நினைத்துப் பார்க்கவே முடியாது.அவனும் அவளும், அவனுடைய சிறிய காரில் இரவு முழுக்க மலைகளை முன்னும் பின்னுமாக வலம் வந்ததும், நதியோரத்துச் சாலையில் பயணம்செய்தும் பொழுது புலரும்வரைச் சுற்றினார்கள். ஒரு கட்டத்தில்பெட்ரோல் தீர்ந்துபோய் காரைத் தள்ளிக்கொண்டு தூங்கிக் கொண்டிருந்த பெட்ரோல் நிலைய பணியாளை அவர்கள் எழுப்பவேண்டியதாயிற்று. அந்த இரவு முழுக்க அவர்கள் குழந்தைகளின்குதூகலத்தோடு நகரத்தைச் சுற்றினார்கள். மூன்று நான்கு முறைஃபர்னெரோவின் முயற்சிகள் பத்தானவையாக இருந்தன; ஒருமுறைஅவன் தான் தங்கியிருந்த விடுதியின் வாசற்படிக்கே அவளை அழைத்துக்கொண்டுபோய் தீர்மானமான குரலில் சொன்னான்: 'அலட்டிக் கொள்ளாமல் நீ இப்போது என்னுடன் மேல்மாடிக்கு வரவேண்டும்.'ஸ்டெஃபனியா மேல்மாடிக்குப் போகவில்லை. அப்படி நடந்து கொண்டது முறைதானா? பிறகு என்ன ஆகும்? அதைப் பற்றி இப்போது நினைக்க அவள் விரும்பவில்லை. ஒரு இரவைத் தூக்கமின்றி கழித்ததில் அவள் சோர்வடைந்திருந்தாள். அல்லது, இந்த அசாதாரண மனநிலையில் இருந்ததால் ஒருவேளை தான் தூக்கக் கலக்கத்தில் இருப்பதையே அவள் இதுவரை உணரவில்லையோ என்னவோ; ஆனால் படுக்கைக்குப் போய்விட்டால் ஒளி மங்கி மறைவது போல அவள் தூக்கத்தில் அமிழ்ந்து விடுவாள். தன்னை எழுப்ப வேண்டாமென்று சமையலறை சிலேட்டில் வேலைக்காரிக்குக் குறிப்பெழுதி வைத்துவிடுவாள். அவளுடைய கணவன் வந்த பிறகு ஒருவேளை அவளை எழுப்பக்கூடும். இன்னும் அவள் தன் கணவனை நேசிக்கிறாளா? அவள் அவனை நேசிப்பது உண்மைதான். அதன் பிறகு என்ன? அவள் தன்னைத்தானே இனி கேள்வி கேட்டுக்கொள்ளமாட்டாள். அவள் அந்த ஃபர்னெரோவோடு லேசாகக் காதல் வயப்பட்டிருந்தாள். லேசாகத்தான். பாழாய்ப்போன முன் கதவை எப்போதுதான் திறக்கப் போகிறார்கள்? மதுபான விடுதியில் நாற்காலிகள் அடுக்கப்பட்டும், மரத்தூள் தரையில் பரப்பப்பட்டும் இருந்தன. கவுண்ட்டரில் பணியாள் மட்டும் இருந்தான். ஸ்டெஃபனியா உள்ளே நுழைந்தாள். அந்த அகால நேரத்தில் அங்கு இருப்பது பற்றி அவள் கொஞ்சமும் சங்கோஜப்படவில்லை. யாருக்கு என்ன தெரியும்? அவள் அப்போதுதான் விழித்தெழுந்திருப்பாள்; ரயில் நிலையம் நோக்கிப் போய்க்கொண்டோ அல்லது வந்து சேர்ந்தோ இருப்பாள். எப்படியோ யாருக்கும் அவள் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. இந்த எண்ணம் அவளுக்கு சந்தோஷம் தந்ததை அவள் உணர்ந்தாள். பணியாளிடம், 'சூடான கடுங் காஃபி' என்று சொன்னாள். அவள் இதற்கு முன் வந்தேயிராத இந்த விடுதியின் பணியாளுக்கும் அவளுக்கும் ஏற்கனவே ஏதோ அறிமுகம் இருந்ததைப்போல அவளுடைய குரலில் நம்பிக்கையும் உறுதியும் ஏற்பட்டிருந்தன.
'சரி அம்மா, யந்திரம் ஒரு நிமிடத்தில் சூடானவுடன் காஃபி தயாராகிவிடும்' என்று சொன்ன பணியாள் தொடர்ந்தான்: 'காலை நேரத்தில் நான் சுறுசுறுப்பு பெற எந்திரம் சூடாகத் தேவைப்படும்நேரத்தைவிட அதிக நேரம் பிடிக்கிறது.'
சிரித்துக்கொண்டே ஸ்டெஃபனியா குளிரினால் காலருக்குள் கழுத்தை இறுக்கிக்கொண்டே 'பர்ர்ர்...' என்று சொன்னாள்.
கடையில் வேறொருவன், ஒரு வாடிக்கையாளன். ஒரு ஓரமாக நின்று ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தான். ஸ்டெஃபனியாவின் நடுக்கத்தைக் கேட்டு அவன் திரும்பியபோதுதான் அவளும் அவனைப் பார்த்தாள். இரண்டு ஆண்கள் அங்கு இருந்தது திடீரென்று அவளை சுயநினைவுக்கு ஈர்த்தது போல கவுண்டருக்குப் பின்புறமிருந்த கண்ணாடியில் தன்னைக் கவனத்துடன் பார்த்தாள். இரவை வெளியே கழித்தவள்போல நிச்சயம் அவள் தோன்றவில்லை; கொஞ்சம் வெளிறிப் போயிருந்தாள். அவ்வளவுதான். பையிலிருந்து சிறிய ஒப்பனைப் பெட்டியை எடுத்து மூக்குப் பகுதியில் பவுடர் போட்டுக்கொண்டாள். அந்த ஆள் இப்போது கவுண்டர் அருகே வந்துவிட்டான். வெண்பட்டுக் கழுத்துப் பட்டியைக் கொண்ட கருப்பு ஒவர் கோட்டையும், நீலநிற சூட்டையும் அவன் அணிந்திருந்தான். யாரையும் குறிப்பாகப் பார்த்துப் பேசாமல் அவன் சொன்னான்: 'காலையில் இந்த நேரத்தில் விழித்திருப்பவர்கள் இரண்டு வகைப்படுவார்கள். இன்னும் விழித்திருப்பவர்கள் மற்றும் இப்போதுதான் விழித்தவர்கள்.'
தன் கண்களை அவன்மீது பதிக்காமல் ஸ்டெஃபனியா லேசாகச் சிரித்தாள். ஆனாலும் ஏற்கனவே அவள் அவனை நன்றாகப் பார்த்திருந்தாள். பரிதாபமும் சாதாரணமும் நிரம்பிய முகம் அவனுடையது. வயோதிகத்தை அடையும் முன்பாகவே தம்மையும் உலகத்தையும் புகாரில்லாமல் ஏற்றுக்கொண்டு, புத்திசாலித்தனத்திற்கும், முட்டாள்தனத்திற்கும் இடைப்பட்ட நிலைக்கு வந்து சேர்ந்துவிட்ட மனிதர்களில் அவனும் ஒருவன்.
அவன் தொடர்ந்தான்: '... ஒரு அழகான பெண்ணை நீ பார்க்கும்போது அவளுக்குக் காலை வந்தனம் சொல்லிவிட்டு...' அவன் தன் வாயிலிருந்த சிகரெட்டை  எடுத்துவிட்டு ஸ்டெஃபனியாவை நோக்கித்தலை வணங்கினான். ஸ்டெஃபனியாவும் கொஞ்சம் குதர்க்கமான குரலில் 'காலை வந்தனம்' என்றாள்.
'... உன்னை நீயே கேட்டுக்கொள்கிறாய்: இன்னுமா? இப்போதுதானா? இப்போதுதானா? இன்னுமா?... அங்குதான் புதிரே இருக்கிறது' என்றான்.
விளையாட்டில் ஈடுபடுத்தப்பட்டும் விளையாட மனமில்லாதவளின் குரலில் 'என்ன?' என்றாள் ஸ்டெஃபனியா. அவன் அவளை விவஸ்தையில்லாமல் உன்னிப்பாகக் கவனித்தான். ஆனால் அவள் 'இன்னும்' விழித்திருப்பவள் என்பதைத் தெரிந்து கொண்டால்கூட ஸ்டெஃபனியா கவலைப்படப் போவதில்லை.
'நீங்கள்?' என்று அவள் மறைமுகக் கேள்வியுடன் கேட்டாள். தூங்காமல் அலையும் இரவு நேர ஆந்தை என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதில் பெருமிதம் கொள்பவன் அவன்; அப்படிப்பட்டவன் என்று தன்னை முதல் பார்வையிலேயே மற்றவர்கள் அடையாளம் கண்டு கொள்ளாதபோது வருத்தம் அடைபவன்.
'என்னையா கேட்கிறீர்கள்? நான் இன்னும் விழித்திருப்பவன்! எப்போதும் இன்னும் விழித்திருப்பவன்!' பிறகு தான் சொன்னதைப்பற்றி ஒரு கணம் யோசித்தான். 'பார்த்தால் உங்களுக்குத் தெரியவில்லையா?' அவன் அவளைப் பார்த்து சிரித்தாலும் இவ்விஷயத்தில் தன்னைத்தானே கிண்டல் பண்ணிக்கொள்ளத்தான் அவன் விரும்பினான். அங்கேயே ஒரு விநாடி நின்று தன் எச்சில் கசந்ததைப்போல அதை மெதுவாக விழுங்கினான். 'பகல் வெளிச்சம் வௌவாலைக் குகைக்குள் துரத்துவது போல என்னை என் இருப்பிடத்திற்குத் துரத்துகிறது...' என்று நாடக பாத்திரம் போல தன்னை மறந்து அவன் சொன்னான்.
'இதோ நீங்கள் கேட்ட பால். இது அந்த அம்மாவுக்குக் காஃபி' என்று சொல்லி பணியாள் கொண்டு வந்து வைத்தான். அவன் தன் கிளாசை ஊதியவாறு மெதுவாக உறிஞ்சிக் குடித்தான்.
'நன்றாக இருக்கிறதா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள்.
'மகா மோசம்' என்று அவன் சொன்னான். 'விஷத்தை உடலிலிருந்து அகற்றும் என்கிறார்கள். ஆனால் இன்றைய நிலையில் அது என்னை என்ன செய்துவிட முடியும்? ஒரு விஷப்பாம்பு என்னைக் கடித்தால் அதுதான் செத்துப்போகும்.'
'உங்களுக்கு ஆரோக்கியம் இருக்கும் வரையில்...' என்றாள் ஸ்டெஃபனியா. வரம்பு மீறி அவள் அவனை கிண்டல் செய்கிறாள் போல.
'எனக்குத் தெரிந்த ஒரே விஷமுறிவு, நீங்கள் என்னை சொல்லச் சொன்னால்...' அவன் என்ன சொல்ல வருகிறான் என்பது  கடவுளுக்குத்தான் தெரியும்.
'நான் எவ்வளவு தரவேண்டும்?' என்று பணியாளிடம் கேட்டாள் ஸ்டெஃபனியா,
'...நான் எப்போதும் தேடிக்கொண்டிருக்கும் அந்தப் பெண்...' என்று அந்த இரவு ஆந்தை தொடர்ந்தான்.
கதவைத் திறந்துவிட்டார்களா என்று பார்ப்பதற்காக ஸ்டெஃபனியா வெளியே போனாள். நடைபாதையில் கொஞ்சதூரம் போனவள் கதவு இன்னும் மூடியிருப்பதைப் பார்த்தாள். இதற்கிடையில் அவளைத் தொடரும் எண்ணம் உடையவனைப் போல அவனும் மதுபான விடுதியிலிருந்து வெளியே வந்துவிட்டிருந்தான். ஸ்டெஃபனியா திரும்பி நடந்து விடுதியில் மீண்டும் நுழைந்தாள். இதை எதிர்பார்க்காத அவன் ஒரு கணம் தயங்கி தானும் திரும்ப ஆரம்பித்தான். ஒருவகையான,நடப்பதை ஏற்றுக்கொள்ளும் தன்மை மேலிட, லேசாக இருமிக்கொண்டு தன் வழியே போக ஆரம்பித்தான்.
'இங்கு சிகரெட் விற்கிறீர்களா?' என்று ஸ்டெஃபனியா பணியாளைக் கேட்டாள். அவளிடம் இருந்தவை தீர்ந்து போயிருந்தன; வீட்டிற்குப் போனவுடனேயே புகைக்க விரும்பினாள். சிகரெட் கடைகள் இன்னும் திறக்கவில்லை.
பணியாளரிடமிருந்து ஒரு சிகரெட் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு காசைக் கொடுத்தாள். விடுதியின் வாசற்படிக்கு அவள் மீண்டும் போனாள். கழுத்தில் கட்டப்பட்ட தோல்வாரை மூர்க்கத்தனமாக இழுத்துக்கொண்டு வேட்டைநாய் ஒன்று அவளை அநேகமாக மோதிக்கொண்டு உள்ளே நுழைந்தது. அதை இழுத்துப் பிடித்துக்கொண்டுஒரு வேட்டைக்காரன் பின்னால் வந்தான். துப்பாக்கி, குண்டுகள் ஆகியவை பொருத்தப்பட்ட இரும்புப் பட்டை மற்றும் வேட்டையாடப்பட்டவற்றை போட்டுக் கொள்ளும் பை ஆகியவற்றோடு அவன் இருந்தான். நாயைப் பார்த்து 'ஃப்ரிசெத்! உட்கார்!' என்று அதட்டியவன் விடுதிக்குள்ளே பார்த்து 'காஃபி' என்று கத்தினான்.
நாயைத் தடவிக்கொண்டே 'அழகாயிருக்கிறது' என்று சொன்ன ஸ்டெஃபனியா, 'இது மோப்ப நாயா?' என்று கேட்டாள்.
'இது ப்ரெத்தினிலிருந்து வந்த இனத்தைச் சேர்ந்த வேட்டை நாய்' என்று சொன்னான். அவன் இளமையாகவும், வெட்கப்படும் சுபாவம் காரணமாக ஒரு மாதிரி கரடு முரடாகவும் இருந்தான்.
'என்ன வயது?'
'ஏறத்தாழ பத்து மாதங்கள். ஃப்ரிசெத் ஒழுங்காக நடந்து கொள்.'
'சரி, கௌதாரிகள் எங்கே?' என்று விடுதியின் பணியாள் கேட்டான்.
'நாய்க்குப் பயிற்சிக் கொடுப்பதற்காகத்தான் வெளியே போகிறேன்' என்று வேட்டைக்காரன் சொன்னான்.
'ரொம்ப தூரம் போவீர்களா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள்.
அதிக தூரத்தில் இல்லாத ஒரு பகுதியை அவன் குறிப்பிட்டான். 'காரில் போனால் அது ஒரு தூரமேயில்லை. எனவே பத்து மணிக்கெல்லாம் திரும்பிவிடுவேன். இந்த வேலை...'
'அந்த இடம் நன்றாக இருக்கும்' என்று ஸ்டெஃபனியா சொன்னாள்.
அவர்கள் இருவரும் எதைப்பற்றியும் அதிகம் பேசவில்லையென்றாலும் உரையாடலை நிறுத்திவிட அவளுக்கு மனமில்லை.
'அங்க பாலை வனமான புதரடர்ந்த ஒரு பள்ளத்தாக்கு இருக்கிறது. காலை நேரத்தில் பனிப்படலம் இல்லாததால் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடியும்... நாய் எந்தப் பறவையையாவது துரத்தினால்...'
'பத்து மணிக்கு எனக்கு வேலை ஆரம்பித்தால் தேவலை. ஒன்பதே முக்கால் வரை தூங்குவேன்' என்று பணியாள் சொன்னான்.
'ஆமாம், எனக்கும் தூங்க ஆசைதான்; இருந்தாலும், எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும்போது அங்கு போக வேண்டியிருக்கிறது...என்னவென்று தெரியவில்லை, எனக்கு அது பிடித்திருக்கிறது... அதுஒரு வெறியாகவே என் உள்ளே இருக்கிறது...' என்று வேட்டைக்காரன் சொன்னான்.
இந்த இளைஞன் தன்னுடைய வெளிப்படையான சுய மெய்ப்பித்தலுக்குப் பின்னால் ஒரு கூர்மையான பெருமிதத்தையும், சுற்றியுமுள்ள தூங்கும் நகரத்தின்மீது ஒரு வெறுப்பையும், வித்தியாசமாக உணர வேண்டுமென்ற உறுதியையும் மறைத்து வைத்திருப்பதை ஸ்டெஃபனியா உணர்ந்தாள்.
'தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம், வேட்டைக்காரர்களாகிய நீங்கள் எல்லாருமே பைத்தியக்காரர்கள் என்பது என் கருத்து; அதாவது நடுராத்திரியில் எழுந்து கொள்ளும் இந்த வேலை...' என்றான் பணியாள்.
'அப்படி இல்லை, அவர்களை நான் புரிந்துகொள்கிறேன்' என்றாள் ஸ்டெஃபனியா. 'ஹ்ம்ம், யாருக்குத் தெரியும்? வேறெந்த வெறியையும் போன்றுதான் இதுவும்' என்று சொன்ன வேட்டைக்காரன் இப்போது ஸ்டெஃபனியாவை நன்றாகப் பார்க்க ஆரம்பித்திருந்தான்.
வேட்டையாடுதலைப் பற்றிய தன் பேச்சில் அவன் முன்பு வெளிப்படுத்தியிருந்த உறுதி இப்போது இல்லாத மாதிரி தோன்றியது. ஸ்டெஃபனியாவின் முன்னிலை, அவனுடைய முழு அபிப்ராயமும் தப்பானதோ என்றும், மகிழ்ச்சி என்பது அவன் தேடிக்கொண்டிருந்த மாதிரி இல்லாமல் வேறான ஒன்றோ என்றும் அவனை சந்தேகிக்க வைப்பது மாதிரி இருந்தது. 'உண்மையாலுமே உங்களைப் புரிந்துகொள்கிறேன். இதைப் போன்ற ஒரு காலை...' என்று ஸ்டெஃபனியா சொன்னாள்.
பேச விரும்பியும் என்ன பேசுவது என்று தெரியாதவன் போல வேட்டைக்காரன் சில விநாடிகள் இருந்தான். 'இம்மாதிரியான உலர்ந்த, குளிர்ச்சியான சீதோஷ்ணநிலையில் நாயால் நன்றாக நடக்க முடியும்' என்றான் அவன். காஃபியைக் குடித்துவிட்டு அதற்குக் காசுகொடுத்தான். வெளியே போக நாய் அவனை இழுத்துக்கொண்டிருந்தது.ஆனால் அவன் தயங்கியபடியே அங்கேயே நின்றிருந்தான். 'நீங்களும்ஏன் என்னுடன் வரக்கூடாது?' என்று ஸ்டெஃபனியாவை அவன்தடுமாற்றத்துடன் தயங்கியபடி கேட்டான்.
ஸ்டெஃபனியா சிரித்தாள். 'ஓ, மீண்டும் நாம் சந்திக்க நேர்ந்தால் அதற்கு ஏற்பாடு செய்வோம், என்ன?'
வேட்டைக்காரன் 'ம்ம்' என்று சொல்லிவிட்டு மேலும் ஏதாவது பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று பார்ப்பதற்காகக் கொஞ்சம் தயங்கி நகர்ந்தான். 'சரி, நான் போகிறேன். வணக்கம்.' இருவரும் கையசைத்துக் கொண்டார்கள். நாய் அவனை இழுக்க வெளியே போனான். ஒரு தொழிலாளி உள்ளே வந்தான். ஒரு கிளாஸ் வைனுக்கு ஆர்டர் கொடுத்தான். பிறகு தன்னுடைய கிளாசை உயர்த்திப்பிடித்து, 'காலையில் சீக்கிரம் கண்விழிக்கும் எல்லாருடைய ஆராக்கியத்திற்கும் - குறிப்பாக
அழகான பெண்களுக்கு' என்றான். அவன் இளைஞனாக இல்லாவிட்டாலும் உல்லாசமாகத் தோற்றமளித்தான். ஸ்டெஃபனியா பணிவாக 'உங்களுடைய ஆரோக்கியத்துக்கு' என்று சொன்னாள்.
'இந்த உலகமே உங்களுக்கு சொந்தமானது என்ற உணர்வே காலையில் உங்களுக்குத் தோன்றும் முதல் எண்ணம்' என்று அவன் சொன்னான். 'மாலையில் இல்லையா?' ஸ்டெஃபனியா கேட்டாள். 'மாலையில் தூக்கக் கலக்கத்தில் இருக்கிறோம். எதைப்பற்றியும் நாம் நினைப்பதில்லை. நினைத்தால் அது தொல்லையைத்தான் உண்டாக்கும்...' என்றான்.
'காலையில் நான் வரிசையாக ஒவ்வொரு பிரச்சனையாக யோசிக்கிறேன்' என்று விடுதியின் பணியாள் சொன்னான்.
'ஏனென்றால் காலையில் வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னால் உனக்கு ஒரு சந்தோஷமான பயணம் தேவைப்படுகிறது. நீ என்னைப்போல செய்ய வேண்டும். குளிர்காற்று என் முகத்தில் பட நான் மோட்டார் சைக்கிளில் தொழிற்சாலைக்குப் போகிறேன்...'
'காற்று யோசனைகளைத் துரத்திவிடும்' என்றாள் ஸ்டெஃபனியா.
'பார், அந்தப் பெண் என்னைப் புரிந்துகொள்கிறார். அப்படிப் புரிந்து கொள்வதால் அவர் என்னுடன் குடிக்க வேண்டும்' என்று தொழிலாளி சொன்னான்.
'நன்றி, நான் குடிப்பதில்லை.'
'காலையில் அதுதான் நமக்குத் தேவைப்படுகிறது. இரண்டு கிளாஸ் வைன்' என்று பணியாளைப் பார்த்து சொன்னான்.
'நான் உண்மையில் எப்போதும் குடிப்பதில்லை; நீங்கள் என்னுடைய ஆரோக்கியத்திற்காகக் குடித்தால் நான் சந்தோஷப்படுவேன்.'
'நீங்கள் எப்போதுமே குடிப்பதில்லையா?'
'எப்போதாவது மாலை வேளையில்.'
'அங்குதான் தப்பு செய்கிறீர்கள், புரிகிறதா...?'
'ஒவ்வொரு நபரும் நிறைய தவறுகள் செய்கிறோம்...'
'உங்கள் ஆரோக்கியத்திற்கு' என்று சொல்லிவிட்டு அவன் தொடர்ந்து இரண்டு கிளாஸுகளையும் காலி செய்தான். 'ஒன்றும் ஒன்றும் இரண்டு. நான் விளக்குகிறேன் பாருங்கள்...'
அந்த வித்தியாசமான ஆண்களுக்கு மத்தியில் ஸ்டெஃபனியா தனியாக உட்கார்ந்து அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். அவள் அமைதியாக,தன்னம்பிக்கை நிறைந்தவளாக இருக்கிறாள்; அங்கு எதுவும் அவளை நிலைகுலையச் செய்யவில்லை. இதுதான் அன்றைய காலையின் புது சம்பவம்.
தன் வீடிருக்கும் கட்டடத்தைத் திறந்து விட்டார்களா என்று பார்ப்பதற்காக அவள் விடுதியிலிருந்து வெளியே வந்தாள். அந்தத் தொழிலாளியும் வெளியே வந்து மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து கையுறைகளை அணிந்துகொண்டான். 'உங்களுக்குக் குளிரவில்லையா?' என்று ஸ்டெஃபனியா கேட்டாள். அவன் தன் நெஞ்சில் தட்டிக் காண்பித்தான். செய்தித்தாள்கள் சரசரக்கும் சப்தம் கேட்டது. 'நான்
கவசம் அணிந்திருக்கிறேன்' பிறகு அவன் உள்ளூர் பேச்சு வழக்கில் 'நான் வருகிறேன், அம்மணி' என்று சொன்னான். ஸ்டெஃபனியாவும் அதே வழக்கில் அவனுக்கு விடை கொடுத்தபின் அவன் தன் வாகனத்தை ஒட்டிக்கொண்டுப் போய்விட்டான்.தன்னால் இப்போது கைவிட்டுவிட்டு மீளமுடியாத ஏதோ ஒன்று நடந்துவிட்டது என்பதை ஸ்டெஃபனியா உணர்ந்தாள். இப்படி ஆண்களுடன் இரவு ஆந்தை, வேட்டைக்காரன், தொழிலாளி - அவள் இருக்கும் புது நிகழ்வு அவளை வித்தியாசமாக உணர வைத்தது. இதுதான் அவள் அவளுடைய கணவனுக்கு செய்த துரோகம். இப்படி ஆண்களுடன் தனியாக, அவர்களுக்குச் சமமாக இருப்பது. அவள் ஃபர்னெரோவைக் கூட மறந்துவிட்டிருந்தாள்.
கட்டடத்தின் முன் கதவு திறக்கப்பட்டிருந்தது. ஸ்டெஃபனியா வேகமாகவீட்டிற்குப் போனாள். வாயிற்காவலாளி அவளைப் பார்க்கவில்லை.
*************
நன்றி: காலச்சுவடு

No comments:

Post a Comment