Search This Blog

Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Tuesday, August 8, 2023

Origin and history of Tamils

 The origin and history of the Tamil people is a complex and fascinating topic that spans thousands of years. The Tamils are an ethnic group native to the Indian subcontinent, with a distinct language and culture. Here's an overview of their origin and historical journey:

 

Ancient Roots and Early Civilization (Prehistoric to 3rd Century BCE): The exact origins of the Tamils are challenging to pinpoint, but their history dates back to prehistoric times. The region now Tamil Nadu, located in southern India, has archaeological evidence of ancient human habitation. The Sangam literature, a collection of Tamil poetic works, offers insights into ancient Tamil society's social, economic, and cultural aspects. These works date from around 300 BCE to 300 CE and provide valuable information about the lifestyle and beliefs of the early Tamils.

 

Chera, Chola, and Pandya Kingdoms (3rd Century BCE - 13th Century CE): During this period, the Tamil region was characterized by three significant dynasties: the Cheras, the Cholas, and the Pandyas. These dynasties engaged in trade, warfare, and cultural exchanges with other parts of India and foreign civilizations, including the Romans and Southeast Asian nations. The Cholas, in particular, established a vast maritime empire extending to present-day Southeast Asia.

 

Medieval Period (13th - 18th Century CE): The medieval period saw the emergence of various empires and kingdoms, including the Vijayanagara Empire, which had influence over Tamil Nadu. This era also witnessed the arrival of various foreign powers, including Muslim sultanates and later European colonial powers like the Portuguese, Dutch, and British. The British East India Company gradually established control over different parts of India, leading to significant changes in Tamil society and economy.

 

Colonial Rule and Modern Era (18th - 20th Century): Tamil Nadu and the rest of India fell under British colonial rule during the 18th century. The British implemented various administrative and economic changes that significantly impacted Tamil society. The 19th and early 20th centuries saw the rise of social reform movements and political activism in Tamil Nadu, with leaders like E.V. Ramasamy (Periyar) advocating for social justice, equality, and the rights of lower-caste individuals.

 

Independence and Post-Independence Period (20th Century - Present): India gained independence from British rule in 1947, forming the modern Indian state. Tamil Nadu has played a significant role in Indian politics and culture, producing influential figures in various fields. The region has also seen linguistic and cultural movements to preserve and promote the Tamil language and identity.

 

Throughout their history, the Tamils have contributed to literature, art, science, and politics, leaving an indelible mark on the cultural tapestry of India and beyond. Today, the Tamil people are spread across various parts of India and other countries due to migration and the Indian diaspora. They continue to celebrate their language, culture, and traditions while adapting to the challenges of the modern world.

Sunday, December 11, 2022

16ஆம் நூற்றாண்டிலயே நாங்கள் ,ஓர் ஒல்லாந்தத் தளபதியின் யாழ்ப்பாண நினைவுத்திரட்டு (A Dutch commander about Jaffna Tamils)

 Dutch commander about Jaffna Tamils 


16ஆம் நூற்றாண்டிலயே நாங்கள் ஒரு ஊழல் நிறைந்த சமூகமாக இருந்து இருக்கிறோம் போல் தெரிகிறது.


“…யாழ்பாணத்தார் தற்பெருமையும்,செருக்கும், சோம்பேறிதனமும், பிடிவாதமும், பிடித்தவர்கள் எனவும், பொய்சொல்லி ஏமாற்றும் தந்திரம் படைத்த இந்த இனத்துடன் மிகவும் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் தமக்கு நன்மை கிடைக்குமென்றால் பொய்ச் சத்தியம் செய்யவும் பொய்ச்சாட்சியம் சொல்லவும் தயங்க மாட்டார்கள் எனவும் 

ஒருவர் மீது ஒருவர் வன்மம் கொண்டு வல்லடி வழக்குத் தொடுத்து வெல்லும் வரை வழக்காடி மகிழ்வார்கள் அதற்காக போத்துக்கேயர் காலத்தில் தீர்க்கப்பட்ட வழக்குகளையே புதுப்பிப்பார்கள் எனவும் கூறியுள்ளார் 


முன்னர் அஞ்ஞான மன்னர்களும் போத்துக்கேயர்களும் ஆண்ட காலத்தில் இவர்கள் சாதி சாதியாகப் பிரிந்து வாழ்ந்து பழகிய படியால் 

சாதிப் பிரிவுகளில் நாம் (ஒல்லாந்தர்) தலையிடக் கூடாது என அறிவுரையும் கூறியுள்ளார் 

40 சாதிப் பிரிவுகள் உள்ளதாக குறிப்பட்டுள்ளார் 

எண்ணிக்கையில் அதிகமான வேளான் தொழிலில் ஈடுபட்ட வெள்ளாளரின் ஆதிக்கம் பற்றியும் எச்சரிக்கை பண்ணியுள்ளார் 

வெள்ளாளரின் சாதித் திமிருக்கு இடம் கொடுத்தால் மாத்திரமே மற்ற எல்லா வேலைகளிலும் கூனிக் குறுகி கெஞ்சிக் கூத்தாடி வேலை செய்வார்கள் எனவும் 


சிங்களவர்களை மக்கள் என்றும் அப்பாவிகள் என்றும் மலபார்களால் ஏமாற்றப்பட்டவர்கள் என்றும் இங்கே கூறியுள்ளார்…” 😢


This is very well explained why we as Thamilan continuously failed as a society 

At least I witnessed this in my Jaffna life around 4-5 years between 1977-1982 


I agree by this Dutch commander’s writing as he put forward many 

Interesting facts as he is referring Yaalpaanies as Malabar 

So he definitely find commonalities among பனங்கொட்டைகள் with மலையாளிகள்  

As both are self centered people promote self interest rather bigger community’ well being which they belongs to 

We still can wittiness these among Kerala and Eezham Tamils as both communities with high literacy rate   


such analysis could have definitely influence the policy makers across the world in dealing with Thamils’ issue as they continue to promote Sinhalese interests to this day 😢


எமது தலையிலேயே மண்ணை அள்ளி வாரிப் போட்டு எமது சமூக அழிவிற்கே வித்திட்ட ஜாம்பவான்கள் நாம்

Tuesday, November 22, 2022

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை படித்ததில் பிடித்தது!

 மகாவித்வான் மீனாட்சி

சுந்தரம்பிள்ளைக்கு பிற்காலக்
கம்பர் என்றே பெயர். தமிழ்
நூல்களை இவர் தேடித் தேடி
வெளிக்கொண்டு வந்த ஆர்வம்தான் பின்னாளில் உ.வே.சாவிற்கு ஓலைச்சுவடி தேடத் தூண்டுகோலாக இருந்தது என்றால் மிகையாகாது. தெருத் தெருவாக பிச்சையெடுத்து உண்ணும் ஒருவருக்குத் தண்டியலங்காரம் என்னும் நூலறிவு உண்டு என்பது
அறிந்து அவர் பின்னால் சென்று தண்டியலங்காரம் கற்றார் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.
மகாவித்வான் மீனாட்சி
சுந்தரம்பிள்ளையின்
மாணாக்கர்கள் யாரென்று பட்டியல் தருகிறேன். பாருங்கள்.
1)மாயூரம் வேதநாயகம் பிள்ளை
2) உ.வே.சுவாமிநாத ஐயர்
3) பூவாளூர் தியாகராசச்
செட்டியார்
4) சவுரிராயுலு பிள்ளை
5) வல்லூர் தேவராசப்பிள்ளை
(இவர்தான் நாம் குறிப்பிடும்
தேவராயசுவாமிகள்)
இப்படிப் பலப்பல ஆல மரங்களை உருவாக்கிய தாய் ஆலமரம்தான் தமிழ் பெரிய பாட்டனாரான மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.
இவரும் ஆறுமுக நாவலரும்
ஒருகாலத்தவர் என்பர்.
ஒருமார்கழியில் விடியற்காலையில்
வைகையாற்றில் இருவரும்
நீராடினார்களாம். அப்போது
மார்கழிக் குளிரைக் குறித்து
“பனிக்காலம் கொடியது”
என்றாராம் ஆறுமுக நாவலர்.
அதற்கு நாவலரின் கருத்தை
ஒட்டியே “பனிக்காலம் மிகவும்
நல்லது” என்றாராம் மீனாட்சி
சுந்தரம்பிள்ளை.
புரியவில்லையா?
பனிக்காலம் = பனிக்கு + ஆலம்
ஆலம் என்றால் நஞ்சு.
பனிக்கு நஞ்சு மிகவும் நல்லது. அதாவது கொடிய பனியை விட நஞ்சு நல்லது என்று பொருள்.
இது செவிவழிச் செய்திதான்
என்றாலும் நினைவு
கொள்வதற்குத் தக்க சுவையான செய்தி.
இங்கனம் புகழ் மிகுந்த தன்னுடைய ஆசிரியரான மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளையின்
சரித்திரத்தை நூலாகவே எழுதி
வெளியிட்டிருக்கிறார்
தமிழ்த்தாத்தா உ.வே.சா.
பெங்களூரிலிருந்த தமிழன்பர்கள் அழைப்பின் பேரில் அங்கு சென்றார் தமிழ் பெரிய பாட்டனார்.
அவரைத் தன்னுடனேயே தங்க
வைத்து விருந்துவகை செய்தார் தேவராயன்.
கற்றுக் கொடுப்பதற்கு நல்ல
ஆசானும் கற்றுக்கொள்வதற்கு
நல்ல மாணவனும் இருந்தால்
அவ்விடத்தில் சிறந்த அறிவு
வேள்வி நடக்கும். அதுதான்
நடந்தது.

படத்தில் உள்ளது
மீனாட்சி சுந்தரம் பிள்ளை (இடது)
முத்துக்குமரப்பிள்ளை(வலது)
தமிழ் பெரிய பாட்டனாரிடம் மொழியின் வளமும்
இலக்கணமும் கற்றார் தேவராயன். கடினமான யாப்பருங்கல காரிகை
கற்பதை விடப் பேரிகை கொட்டிப் பிழைப்பு நடத்தலாம் என்று ஒரு சொலவடை உண்டு.
ஆனால் தேவராயன் மிக எளிதாக
யாப்பருங்கல காரிகை என்னும் செய்யுள் இலக்கண நூலைக் கற்றார்.
கற்றதனால் ஆய பயனாக சிறந்த செய்யுட்களையும் இயற்றினார். அந்தச் செய்யுட்களில் மீனாட்சி
சுந்தரம்பிள்ளையின் கருத்துப்படி திருத்தங்களும் செய்தார்.
மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு
உழைக்கத் தெரிந்த அளவுக்குப் பிழைக்கத் தெரிந்திருக்கவில்லை.
அவரை அப்படிப் படைத்த
பிழைக்குத் திருத்தம் செய்ய
முருகன் விரும்பியதாலோ
என்னவோ தேவராயனை அவருக்கு மாணாக்கராக்கினார்.
பெங்களூர் ு:் பெரிய பாட்டனார்
திருச்சீராப்பள்ளி திரும்பும்
நாளும் வந்தது. கல்விக் கொடை தந்த ஆசானுக்குச் செல்வக் கொடை அளிக்க விரும்பினார் தேவராயன்.
ஐயாயிரம் வெள்ளைப் பொற்காசுகளும்
அழகான பட்டாடைகளும் தந்து
ஆசானை வணங்கினார்.
கணக்குப்பிள்ளை தொழிலை
மறந்து தமிழ்த்தொண்டில்
ஆழ்ந்திருந்த மகாவித்வான்
மீனாட்சி சுந்தரம்பிள்ளைக்கு
இந்தப் பரிசு மிகப்பெரிய பரிசு.
இன்றைக்கும் இந்த அளவு பரிசு மிகப் பெரிய பரிசுதான்.
தன்னுடைய மாணவனை உளமார வாழ்த்தினார் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. பேரும் புகழும் பெற அவர் வாழ்த்திய வாழ்த்துதான்
இன்றும் நாம் தேவராய சுவாமிகளை நினைவில் வைத்துப் பார்க்கும்
பெருமையைக் கொடுத்தது
என்று சொல்வதும் சரியே.
ஆசான் கிளம்பிச் சென்ற பின்னர் பெங்களூரில் கணக்குப்பிள்ளை தொழிலையும் தமிழ்த் தொண்டையும் தொடர்ந்து
செய்தார் தேவராயன்.
பெங்களூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று இருக்கிறதா என்று
தெரியவில்லை. பெங்களூர்
தமிழ்ச்சங்கத்தில் யாருக்கேனும்
தெரிந்திருக்கலாம்.
பெங்களூர் நண்பர்கள் இதுகுறித்து விசாரித்து விவரம் தந்தால் நன்று.
இளம் வயதிலேயே கல்வியும்
செல்வமும் அள்ளக் குறையாமல் சேர்ந்தவருக்கு வயிற்றில் வலியும் சேர்ந்தது.
பெங்களூரின் மிக நல்ல
மருத்துவமனையில் சிறப்பான
மருத்துவர்களின் சிகிச்சை
எடுத்துக் கொண்டாலும் வயிற்றுவலி தீரவேயில்லை.
செல்வத்தை அள்ளியள்ளிக்
கொட்டினாலும் வயிறு சொன்ன பேச்சு கேட்கவில்லை. வலியும் குறையவில்லை.
தன்னுடைய திறமை வேலை
செய்யாத பொழுது ஆண்டவனை நினைத்துப் பார்ப்பதுதானே நமது செயல்!
அப்பரும்
பகழிக்கூத்தரும் ஆதிசங்கரரும்
கொண்ட வயிற்றுவலியை
நினைத்துப் பார்த்தார்.
அப்பேர்ப்பட்ட பெரியவர்களுக்கு
ஆண்டவன் இறங்கி வந்து அருள்வது உண்டு. ஆனால் தம்மைப் போன்றவர்களுக்கு இறைவன் உதவுவானா என்று ஒரு ஐயம். வலிக்கும் சந்தேகத்துக்கும்இடையில் தவித்த தேவராயனது
மனது ஒரு முடிவுக்கு வந்தது.
ஆம். இனிமேலும் வலியினால்
உண்டாகும் வேதனையோடு
வாழ்வதில் பயனில்லை என்று
முடிவு கட்டி தன்னுயிரை
மாய்க்க எண்ணினார்.
இருபதுகளில் ஒருவருக்கு
வரவேண்டிய எண்ணமா இது!
அந்தோ! தேவராயனுக்கு வந்தது. தமிழ்க் கடவுளான முருகன் குடிகொண்ட திருச்செந்தூர்க் கடலில் மூழ்கி இறக்கத் திட்டம் கொண்டு பெங்களூரிலிருந்து
கிளம்பினார் தேவராயன்.
ஆனால் இறைவன் எண்ணம்
வேறுவிதமாக இருந்தது.
திருச்செந்தூருக்குச் சாவைத்
தேடிச் சென்ற தேவராயனை சஷ்டி வரவேற்றது. சஷ்டித்
திருவிழாவைக் கொண்டாடி
விட்டு உயிரை விடலாம் என்று
தற்கொலையை ஆறு
நாட்களுக்குத் தள்ளிப் போட்டார் தேவராயன்.
அப்படித் தள்ளிப் போட்டதுதான்
செந்தூர் முருகனின்
அருட்கொடையை நமக்கு அள்ளிப் போட்டது.

சிவாயநம

Ilango Krishnan

Saturday, November 19, 2022

தொல்காப்பியம்

 தொல்காப்பியம் (ஆங்கில மொழி: Tolkāppiyam) என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இஃது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. தொல்காப்பியத்தில் இடைச்செருகல்கள் உள்ளதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.[1] பழங்காலத்து நூலாக இருப்பினும், இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே.

தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு காலந்தோறும் பல வழிநூல்கள் தோன்றின.


தொல்காப்பியம் என்ற பெயரே தொல்காப்பியன் என ஆசிரியர் பெயராக மாறியது என்று ஒருசாராரும், நூலாசிரியர் பெயராகிய தொல்காப்பியன் என்பதே தொல்காப்பியம் என நூற்குப் பெயராயிற்று என மற்றொரு சாராரும் மொழிவர் “தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி” என்று பாயிர் ஆசிரியர் பனம்பாரனார் கூறியமையால் ஆசிரியரின் இயற்பெயரே அஃது என்றும், தோற்றி என்பதால் செயற்கையாகத் தோற்றுவிக்கப்பட்டது. என்பாராய் நூலின் பெயரே நூலாசிரியர்க்கு ஆயிற்று என்றும் வெவ்வேறு நோக்கில் விளக்கம் காண்பர் நூலாசிரியர் பெயர்க்கு முன்னுரிமை தருவோர் காப்பியக்குடியில் பிறந்தமையால் தொல்காப்பியன் எனப்பட்டார் எனக் காரணம் கூறுவர். இதற்குச் சான்றாகச் சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையில் வரும் ‘காப்பியத் தொல்குடி” என்னும் தொகையைச் சுட்டுவா். வடநாட்டில் விருத்தக்காப்பியக்குடி’ என்ற குடி உண்டு என்றும். அதன் மொழி பெயர்ப்பே தொல்காப்பியம் என்றும் கருதுவோர் உளர். தமிழகத்துள் சிறந்தோரை வடபுலத்தாராக்கிக் காட்டுவதில் முனைப்புடைய இலர்.

தம் கூற்றிற்கு அரணாக நச்சினார்க்கினியர் கூறும் கதை அமைந்துள்ளது. அவர் சமதக்கினியின் மகனான திரண தூமாக்கினியாரே தொல்காப்பியர் என்றும், அகத்தியர் தென்னாடு வரும்போது பதினெண் வேளிரோடு தம் மாணவராகிய திரண துமாக்கினியாரையும் அழைத்து வந்தார் என்றும் குறிப்பிடுவார். சமதக்கினியின் மக்கள் பரசுராமன் முதலிய நால்வர் என்றும், அவருள் யார்க்கும் திரணதூமாக்கினி என்ற பெயா இல்லை என்றும் இராமாயணக் கதையால் அறிகிறோம். தொல்காப்பியர் வட நாட்டினின்றும் வந்தவர் என்பதை இரா இராகவஜயங்கார் மு இராகவ ஐயங்கார், & வெள்ளைவாரணர் போன்றோர் தக்க காரணங்களோடு மறுத்துள்ளனர். தொன்மையான இலக்கணக் கருத்துக்களைக் காப்பதால் தொல்காப்பியம் என நூலுக்குப் பெயர் வந்தது எனவும், அதுவே நூலாசிரியர்க்கும் பெயராய் அமைந்தது என்றும் கூறுதல் பொருத்தமாக உள்ளது. தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் பன்னிருவருள் ஒருவர் என்ற கருத்தும் பிற்கால இலக்கணப் பாயிரங்களில் காணப்படுகிறது.

சிறப்பும் சீர்மையும்

1.தொல்காப்பியம் கிடைக்கும் தமிழ் நூல்களில் முதல் நூல். வேத காலத்தது என்று குறிப்பிடும் அளவிற்கு மிகப் பழமையானது. வடமொழிப் பாணினிக்கும் முற்பட்டது; அதனால் பாணினிக்கும் வழிகாட்டியாய் அமைந்தது. உலகமொழி இலக்கணங்களின் முன்னோடி யாகப் பாணினியை மேளாட்டார் குறிப்பிடுவது தவறு தொல்காப்பியமே உலகமொழி இலக்கணங்கள் அனைத்திற்கும் முன்னோடி அது தமிழின் உயிர் நாடி.

2.ஒலிகளின் பிறப்பு, வகைமை சொற்களில் அவை நிற்கும் இடம் ஆகியவை பற்றிய தொல்காப்பியரின் விளக்கங்கள். உலக மொழிகளின் ஒலிகளை ஆயும் ஒலியியலாரை வியப்பில் ஆழ்த்துவன; அவர்களால் பெரிதும் பாராட்டப்படுவன.

 “எழுத்ததிகாரப் பிறப்பியல் தமிழுக்கே சிறப்பாக அமைந்தது மட்டுமின்றிப் பிறமொழி ஒலிகளையும் எழுதிக்காட்டும் ஏற்றம் சான்றது. வே மாணிக்க நாயக்கர்

“இலக்கண உலகின் ஏகச் சக்கரவர்த்தி என்று கூறப்படும் பாணினி என்ற வடமொழி ஆசிரியரும், இவ்வளவு விரிவாக (ஒலியை) ஆராய்ந்த திலலை” – எஸ் வையாபுரிப்பிள்ளை

3.வேதங்கள் எழுதாக்கிளவி எனப்பட்டன. வடமொழி இதிகாசங்கள் வாய்மொழியாக வழங்கப்பட்டன. கி.பி. 3ஆம் நூற்றாண்டில் தான் வடமொழி எழுத்துக்கள் வரிவடிவம் பெற்று வடமொழி இலக்கண இலக்கியங்கள் ஏட்டில் ஏறின வேத காலத்தது எனக் கருதப்படும் பழமை வாய்ந்த (சி.மு 1500) தொல்காப்பியத்தில் தமிழின் வரிவடிவங்கள் குறிப்பிடப்படுகின்றன. உலகில் வரிவடிவம் கூறும் ஒரே பழைய இலக்கணம், தொல்காப்பியமே.

4.உலக மொழிகளின் மாபிலக்கணங்கள் பேச்சு மொழியைப் புறக் கணிக்கும். மொழியியலாரோ பேச்சு மொழிக்கு முன்னுரிமை தருவர். தொல்காப்பியம் பேச்சுமொழி, இலக்கியமொழி ஆகிய இரு வகை வழக்கிளையும் ஆராய்ந்து கூறும். பேச்சுமொழிகளையும், வட்டார வழக்குகளையும் (திசைச்சொல் ஆராய்ந்து இலக்கணம் வகுக்கும் முறைமையை முதன்முதலில் கையாண்ட தொல்காப்பியர் இவ்வகையில் இன்றைய மொழியியலார்க்கும் வழிகாட்டி ஆவார்.

5.தொல்காப்பியர் உலகப்பொருட்களை உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துப் பாற்பாகுபாடு செய்தமை, அறிவியற் கண்ணோட்ட முடையது. உலகின், பிறமொழியாளர் அறியாதது. ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் இடையே ஏற்படும் குழப்பத்தைப் போக்கியது. அதனால் தமிழ்த் தொடர்கள் தெளிவும் விளக்கமும் பெறுகின்றன.

6.வெளிப்பட நின்று பொருளுணர்த்தும் தொடரமைப்புக்கள் மறைந்து நின்ற சொற்களால் பொருள் உணர்ந்தற்கேதுவாகிய எச்சவகைகள், கூட்டுச் சொற்களாகிய தொகைச்சொற்கள் (Compound words) பெயரும் வினையுமாகிய சொற்களின் பல்வேறு வகைகள். வேற்றுமைத் தொடர்கள், உரியாலும் இடையாலும் ஏற்படும் சொல்லாக்கங்கள் எனப் பலவாகிய மொழி நுட்பக் கருத்துக்களைத் தொல்காப்பியம் விளக்கி அமைகிறது. இன்றைய மொழியியல் அறிஞரும் போற்றும் நுண்மைகள் பல தொல்காப்பியத்தில் ஒளிர்கின்றன.

7.பிற்காலத்தில் தோன்றிய நன்னூல், இலக்கண விளக்கம் போன்ற மொழி இலக்கணங்கட்கும். இறையனார் களவியல் நம்பியகப் பொருள். புறப்பொருள் வெண்பாமாலை முதலிய பொருள் இலக்கணங்கட்கும், தண்டியலங்காரம். மாறனலங்காரம் போன்ற அணியிலக்கணங்கட்கும், யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை: யாப்பதிகாரம் முதலிய யாப்பிலக்கண நூல்கட்கும். இலக்கிய வகைமைகளை வரையறுக்கும் பாட்டியல் நூல்களுக்கும் தொல்காப்பியமே வழிகாட்டி இலக்கணத் துறையில் மட்டுமின்றி இலக்கியத் துறையிலும் புதுப்புது இலக்கியங்கள் பிற்காலத்தில் தோன் தொல்காப்பியம் பெரிதும் உதவிற்று. ஆற்றுப்படைப் பாடல்கள். மடல் இலக்கியங்கள். கோவை இலக்கியங்கள், பிள்ளைத்தமிழ் காதல் இலக்கியங்கள். தூது இலக் கியங்கள் களவழி நாற்பது தேரோர் களவழி பள்ளு (ஏரோர் களவழி முதலான பல இலக்கியங்கள் தொல்காப்பிய அகப்புறத் துறைகளின் தாக்கத்தால் அரும்பின. இக்கால இலக்கியங்களிலும் தொல்காப்பியக் கருத்துக்களும் வழி காட்டு நெறிகளும் ஊடுருவியுள்ளன. காலந்தோறும் தோன்றுகிற எல்லாவகை இலக்கண இலக்கியங்களும் தொல்காப்பிய ஆகாயை அடியொற்றித்தான் நடக்கும். இக்கருத்தில்,

“கூறிய குன்றினும் முதனூல் கூட்டித்

தோமின் நுணர்தல் தொல்காப் பியன்தன்

ஆணையில் தமிழறிந் தோற்குக் கடனே“

எனப் பல்காப்பியளார் பாராட்டுவார்.

8.வாழ்க்கை முறை தொழில் மக்களின் பண்புநலன்கள் பண்பாடு நாகரிகம் பொருள்வளம், சமூகநிலை கடவுட்கொள்கை மரபு பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கூறுவதால் சமூகப் பொருளாதாரப் பண்பாட்டு வரலாற்று நூலாகவும், நிலப்பாகுபாடு தமிழ் நாட்டெல்லை. மூவேந்தர்கள். போர்முறை ஆட்சிமுறை முதலிய வறறைக் குறிப்பிட லால் அரசியல் வரலாற்று நூலாகவும், தன்கால இலக்கண இலக்கியக் கருத்துக்களை வகுத்துரைப்பதோடு முன்னிலவிய இலக்கண இலக்கியக் கருத்துக்கலளயும் குறிப்பிட்டுச் சுட்டலால் இலக்கிய – இலக்கண வரலாற்று நூலாகவும் தொல்காப்பியம் விளங்குகிறது. தமிழரின் பெருமையையும் பண்பாட்டையும் பறைசாற்றும் முதன்மை நாகரிக முன்னோடி நூல் தொல்காப்பியம்.

9.உலகின் பிறமொழி இலக்கணம் எதுவும் பொருளாராய்ச்சியை மேது கொண்டதில்லை. மொழி இலக்கணத்திற்கு நிகராகப் பொருளிலக் கணம் கூறும் உலகின் ஒரே இலக்கணம் தொல்காப்பியம். இக்கால ஆய்வாளர்கள் பொருளதிகாரத்தை நுவல்பொருள் இலக்கணம் என்றும் பானியற் கோட்டாடு என்றும் இலக்கியக் கொள்கை என்றும் இயம்புவர்.

10. தொல்காப்பியம் மொழியிலக்கணம் மட்டும் மொழியாமல் பொருண்மை இலக்கணமும் (Semantics)  பேசுகிறது. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்று கூறுவதோடு உரியியலில் சொற்பொருள் விளக் கமும் உரைக்கிறார் சொல்லின் பொருள் மரபு வழியே வருவது எனவே “மரபுநிலை திரியிள் பிறிது பிறிதாகும்” என்பார். தொல்காப்பியர்

கடிசொல் இல்லை காலத்துப் படினே

என்று கூறிப் புதிய புதிய சொற்கள் தோன்றுதலையும் தொல்காப்பியர் வரவேற்கிறார்.

11.பிற்கால நிகண்டுகள் தோன்றத் தொல்காப்பிய உரியியலே வழி காட்டி, அகராதியின் முன்னோடி அது.

12. உலகில் முதன்முதலில் மொழிபெயர்ப்புப் பற்றியும் அதன் வகைகள் பற்றியும் குறிப்பிடும் நூல் தொல்காப்பியம் ஒருமொழியிலிருந்து இன்னொரு மொழியின் ஒவி வரிவடிவத்திற்குக் கொண்டு செல்லும் உத்தியினைத் (Translitaration) தொல்காப்பியர், வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ எழுத்தோடு புணர்ந்த சொல்லாகும்மே. என்ற நூற்பாவில் குறிப்பிடுவார் சொல்லுக்குச்சொல் பொருள் பெயர்த்தலை மொழி பெயர்த்தல் என்றும் விளங்கும் வகையில் கருத்துப் பெயர்த்தலை அதற்படயாத்தல் என்றும் வகைப்படுத்திக் கூறியுள்ள திறம் பெரிதும் போற்றத்தக்கது.

13. அகப்பொருள் மாந்தரின் பெயர் கூறக்கூடாது என்ற தொல்காப்பியரின் விதி இலக்கிய உணர்வுகளைச் சமுதாயத்திற்குப் பொதுவாக்கமுனையும். இக்காலத்தில் நடப்புச் செய்திகளையோ, புனைவுகளையோ கதையாகக் கூறுங்கால் கற்பளையாகப் பெயர்களைப் படைத்து மொழிவதும் அக்காலத்து அசுமாந்தர் குறிப்பிட்டுப் பெயர் சுட்டப்படாததும் இலக்கியம் ஒருவருக்காகவன்றி எல்லோருக்கும் பொதுவாக உரியது” என்பதில் ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன.

14.உணர்வுகளைப் பொதுலான மெய்ப்பாடுகள் அகப்பொருட்கு மட்டுமே உரிய மெய்ப்பாடுகள் என வேறுபடுத்தி விளக்கி இருக்கும் திறம், இன்றைய உளவியலாளரையும் திகைப்புறச் செய்யும் உளவியல் மட்டுமின்றி உயிர்களின் வகைப்பாடு, ஓரறிவுயிர்களைப் புல்வகை, மரவகை எனப் பகுத்து விளக்கியமை போன்றன, அறிவியற்றுறைக்குச் சவால்களாக அமைவன.

15. “பாணினியின் தெளிவும் பதஞ்சலியின் திட்பமும் அரித்தாட்டிலின் தெளிவும். அவையனைத்திலும் இல்லா வளமும் வளப்பும் அளவை நூன் முறையமைப்பும் பெற்றுச் செறிவும் தெளிவும் நெறியா நெகிழ்வும். நிரம்பியமைந்தது தொல்காப்பியம்” நாவலர் சோமசுந்தர பாரதியார்.

16.இன்றைய அறிஞர்கள் இலக்கணத்தினை வண்ணனை முறையியல் (Descriptive) வரைவியல் (Perscriptive) வரலாற்றியல் (Histo-rical ஒப்பியல் (Comparative) எனப் பலவாறு பகுத்துரைப்பர் அப்பகுப்புத் திறங்கள் அனைத்தும் ஆங்காங்கே பொதுளி நிற்பத் தொல்காப்பியா தம் நூலினை அமைத்துள்ள அருமைப்பாடு பெருமைப்பட வைக்கிறது.

17. இலக்கணமாக மொழி நூலாக ஆராய்ச்சிக் கருவி நூலாக அமைந்த தொல்காப்பியம், இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர். நச்சினார்க்கிளியர், தெய்வச்சிலையார். கல்லாடனார் போன்ற பழம் பெரும் புலவர்களின் உரைகளைப் பெறும் மேன்மைமிக்கது. தொல்காப்பியப் பாயிரவிருத்தி முதற்குத்திர விருத்தி போன்ற விளக்கவுரைகள் மட்டுமின்றிச் சோமசுந்தரபாரதியார். அரசஞ்சண்முகனார் போன்றோரின் ஆய்வுரை கட்கும் அரங்கமாகியது பி.எஸ். சுப்பிரமணிய சாத்திரியார், மு இராக வையங்கார். வெள்ளை வாரணனார், இலக்குவனார்.வ. சுப. மாணிக்கனார் முதலிய பலரும் தொல்காப்பியக் கடலுள் முழுகி ஆய்ந்து முத்தெடுத்துள் ளனர். தொடர்ந்து ஆய்வுக்களமாக இருந்து வருவதோடு காலந்தோறும். புதுப்புதுக் கருத்துக்களைத் தோண்டி எடுக்கும் சுரங்கமாகப் – பிரதியாகப் புதுமைப் பொலிவோடு பூத்துக் குலுங்கிய வண்ணம் உள்ளது. தொல்காப்பியம் என்றால் என்ன?

தொல்காப்பியத்தின் முதற்பதிப்பாசிரியர் சி.வை தாமோதரம்பிள்ளை (1892) முடிவாக, நாவலர் சோமசுந்தர பாரதியார் தரும் புகழுரையினை முத்தாய்ப்பாகக் கொள்ளலாம். “குறையியலா நிறைவு அறிவு சால் செறிவு நிரம்புவளம். வரம் பிறவாமல் வரையறுத்து வடித்த முறைவனப்பு, மொழி வளர்ச்சிக்கு என்றும் தளர்ச்சிதராக் கட்டமைப்புகளால் ஒப்புயர்வற்ற சிறப்பு வாய்ந்த இலக்கணநூல் தமிழில் மட்டுமன்று: உலகில் நிலவும் பல மொழிகளில் பாராட்டப்பெறும் எல்லா இலக்கணங்களிலும் இல்லாத இயல்வளமும். எழிலும், பயனும், பண்பும் வாய்ந்தது. வேறெந்தமொழி நூலுக்கும் இல்லாத பழமையும் பெருமையும். அழகும் அருமையும் அமைந்தது.

தொல்காப்பியம் – தொல்காப்பியர் பற்றிய மேற்கண்ட செய்திகள் அனைத்தும் தமிழ் இலக்கிய வரலாறு, க.கோ.வேங்கடராமன் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டன.

Thanks https://kelviyumpathilum.com/

Wednesday, September 29, 2021

ஒரு மொழியின் இலக்கணம், இலக்கியம் என்பவற்றை எப்படி அழிக்கலாம்?

 

Rajarednam Neminathan

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமானால்; ஆட்களைக் கொன்றுதான் அழிக்கவேண்டும் என்றில்லை. அந்த இனத்திற்கான மொழியை அழித்துவிட்டால் சரி.

அப்படியாயின் மொழியை அழிக்கவேண்டும் என்றால் என்னசெய்யலாம்?
அந்த மொழியின் இலக்கியம், இலக்கணங்களை அழித்துவிடவேண்டும்.
ஒரு மொழியின் இலக்கணம், இலக்கியம் என்பவற்றை எப்படி அழிக்கலாம்?
ஒரு மொழியில் பயன்படுத்தப்படும் சொற்களை, வாக்கியங்களை எழுத்துக்களை எழுத்தின் உறுப்புக்களை எப்படிப் பாவித்தாலும் சரி, விளங்கினால் சரிதான், தொடர்பாடல்தான் முக்கியம், மொழி என்பதே தொடர்பாடலின் கருவிதான் என்று சுருக்கிவிட்டால் சரி.
இப்படியான ஒரு தோற்றமாயையை ஏற்படுத்தினால் ஒரு விடயத்தை பலரும் பல விதமாகப் பயன்படுத்த இடமளிக்கும். இதனால் சொற்களில், இலக்கணத்தில், எழுத்தமைப்பில் ஒரு குழப்பம் தோன்றும் அந்தக் குழப்பத்தை மூலதனமாக்கி கிளைமொழிகள் உருவாகும். கிளைமொழிகள் உருவாகினால் மூலமொழி அழியும்.
மொழி என்பது இயற்கையின் அங்கமாகும். மனித மனத்தின் செயலாற்றலாகவும் உள்ளுணர்வாகவும் சக்தியாகவும், ஒருவரின் மனச்சாட்சியாகவும் மொழி இருக்கிறது. அப்படியென்றால், மொழி மனித மனத்தின் ஒட்டுமொத்த அறிதல் என்றாகிறது. அறிதல் வளரவளர, மொழியும் வளருகிறது. மொழி தொடர்பாடும் ஊடகம் மட்டுமே என்பது வீட்டில் மாட்டிவைத்திருக்கும் சுவாமி படங்கள்தான் கடவுள் என்று சொல்வதற்கு ஒப்பானது.
மொழியின் செயற்பாடு வெறுமனே தொடர்பாடல் மாத்திரந்தான் என்று நினைப்பது மொழியறிவின் முதற்கட்டமான குழந்தைநிலை. உதாரணமாக நான் உங்கள் ஊரைக்குறிப்பிட்டு திட்டுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் புவியியல் ரீதியான ஒரு இடமாக மட்டும் உங்கள் ஊரை வைத்திருந்தால் பேசாமல் போய்விடுவீர்கள். ஆனால் உங்களது ஊர், உங்களது ஆழ்மனதுடன், நினைவுகளுடன், நம்பிக்கைகளுடன், உணர்வுகளுடன், அறிவு, மனப்பாங்கு போன்ற பல விடயங்களுடன் தொடர்பட்டிருப்பதால் உங்களுக்கு ஊரைத் திட்டியதும் கோபம் வருகிறது. மொழியின் பங்களிப்பு தொடர்பாடல் மட்டும்தான் என்று சொல்வது. ஒரு தட்டையான கருத்தாகும். ஊர் என்பது உங்கள் வசிப்பிடம் அமைந்திருக்கும் ஒரு இடந்தானே அதைத் திட்டினால் உங்களுக்கேன் கோபம் வரவேண்டும். மொழி என்பதும் அதைப்போலத்தான் அதன் நோக்கம் தொடர்பாடல் மட்டுந்தான் என்றால்; நீங்கள் உலக வரலாறு அறியாதவர்தான். மொழியினால் எத்தனை போர்கள் நடந்திருக்கின்றன.
பிரித்தானியா என்றால் ஆங்கிலேயர்களின் நாடு என்றுதான் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் நினைப்பார்கள் ஆனால் அங்கு வேல்ஸ் மொழி, ஐரிஸ் மொழி என்று பிறமொழிகள் உள்ளன என்பதை அறிவீர்களா? அவர்களிடமிருந்து மொழி என்பது தொடர்பாடல் செய்யும் கருவி மட்டுல்ல என்பதை அவர்களுடன் நீண்டகாலமாகப் பழகி நிதானமாக அறிந்துகொண்டேன். மொழி வெறுமனே தொடர்பாடற் கருவிதான் என்போரைப் பார்க்கும்போது எனது வேல்ஸ் நண்பர்கள் ஞாபகத்திற்கு வருவார்கள்.
Say the Colour with "U" ஆங்கிலேய நண்பர்கள் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது அமெரிக்க ஆங்கிலத்திடம் இருந்து பிரிட்டிஷாரின் ஆங்கிலத்தை பாதுகாக்க அவர்கள் திடமாக இருப்பதைத்தான் இந்த சொல்லாடல் உணர்த்தும். பிரித்தானியர் வர்ணத்தை colour என்று எழுதுவர். அமெரிக்கர்கள் color என்று எழுதுவார்கள்.
உச்சரிக்கும் போது இருவரும் ஒரேவிதமாகத்தான் உச்சரிப்பர். ஆனால் "U" சேர்த்து உச்சரிக்கவேண்டும் என்று பிரித்தானியர்கள் சொல்வது அமெரிக்க ஊடுருவலில் இருந்து பிரித்தானிய ஆங்கிலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான். உண்மையில் உச்சரிக்கும்போது "U" இனை உச்சரிக்கமுடியாது ஆனால் அவர்கள் அப்படிச்சொல்வது அமெரிக்க ஆங்கிலத்தில் இருந்து பிரித்தானிய ஆங்கிலத்தைப் பாதுகாக்கத்தான்.
இரண்டும் ஆங்கிலந்தானே பிறகு ஏன் பாதுகாக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். இரண்டும் ஆங்கிலந்தான் ஆனால் ஒரே மொழியில் தங்களது தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
இணையத்தையும் சமூக ஊடகங்களையும் நேற்றுக்கண்ட நாமே எழுதுவது மற்றவருக்கு விளங்கினால் சரி தொடர்பாடல்தானே? என்று குறிப்பிட்டால் மொழியை நாங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். தொடர்பாடல் மட்டுந்தான் மொழியின் நோக்கம் என்றால் உலகின் எல்லோரும் விளங்கிக்கொள்ளக்கூடிய சைகை மொழியை நாம் பொதுமொழியாக்கிவிடலாமே?
பேச்சுமொழி உரையாடலில், பேசாமல் முக அறிகுறிகளாலும், சைகைகளாலும் கருத்துக்களை வெளியிடுவதற்கு இடமும், வழிகளும் உண்டு. அத்துடன் உடனுக்குடன், விளக்கம் கேட்டு அறிந்து கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் இந்தவசதி, எழுதும் மொழியில் பொதுவாக் கிடைப்பதில்லை. இதன் காரணமாகச் எழுத்துவடிவத்தில் சில கூடுதல் குறியீடுகளைப் பயன்படுத்திக் கடுமையான விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.
அதிலும் மொழிகளின் தனித்துவம் காரணமாக ஒவ்வொரு மொழியின் அடிப்படையில் வெவ்வேறு சைகைமொழிகள் உள்ளன. உதாரணமாக ஆங்கிலத்தை அடிப்படையாக கொண்டமைந்த சைகைமொழி கற்றவருக்கு, தமிழ் சைகை மொழி விளங்காது.
உலகின் எந்த மூலையிலும் தமிழ்மொழிக்கென்று ஒரு நாடு இல்லை. அரசியல் அதிகாரத்தில் இல்லாத ஒரு மொழி எவ்வாறு அழியாமல் நிலைத்திருக்கிறது என்றால் அதற்குரிய காரணம் தமிழர் இலக்கியங்களும் இலக்கண நூல்களுந்தான்.
பொருள்பொதிந்த மொழியை உருவாக்கச் சொற்கள் விதிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, சொல்லின் அமைப்பு ஒரு குறிப்பிட்ட விதிகளைப் பின்பற்றி பொருத்தமான பொருளை உருவாக்குவதாகும். இந்த விதிகளும் தன்னிச்சையாக ஏற்படுத்தப்பட்டதாகும். இருப்பினும், அந்த விதிகள் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நிரந்தரத் தன்மை கொண்டவை. ஆகையால், ஒலிக்குறியீட்டின் அடிப்படையில் எழுந்த விதிகளால் உருவான மொழியின் மூலமாகத்தான் மனிதர்கள் கருத்துக்களை உருவாக்குகிறார்கள். இந்த விதித்திட்டம் மிகவும் சிறப்பான முறையில் மனிதனால் மட்டுமே ஏற்படுத்தப் பட்டதாகும்.
உதாரணமாக எனது அனுபவம் ஒன்றைச் சொல்கிறேன். ஆலயத்தில் ஓரு சிவனடியார் கொஞ்சம் நகைச்சுவையாப் பேசிக்கொண்டிருந்தார். நான் அவரது பக்கத்தில் போய் அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். எனது கையில் இருந்த கற்பூரப் பெட்டியை அவர் கவனித்துவிட்டார். "இது என்ன" என்று கேட்டார். நானும் "கற்பூரம்" என்றேன். அது தவறு என்றார். கருப்பூரந்தான் சரி என்றார். "அப்படியானால் இந்தப் பெட்டியில் எழுதியிருப்பது தவறு என்கிறீர்களா?" என்று நான் கேட்டேன்.
"நீ நாச்சியாரைப் பிழை சொல்கிறாயா? என்றார்.
கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்தி ருக்கும்மோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே
என்னும் பாடலிலே கருப்பூரம் என்றுதான் சொல்லியிருக்கிறாள்." என்றார் பிறகெப்படி கருப்பூரம் கற்பூரமாக மாறும் என்றார்.
இனிமேல் கருப்பூரம் என்றுதான் பாவிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். ஒரு சொல்லுக்கே இலக்கியத்தில் ஆதாரம் இருக்கும்போது உரைநடை ஐரோப்பியர் காலத்தின் பின்னர்தான் தோன்றியது எனினும் அதையும் கடந்து நிற்பதாகவே எமது மொழியின் இலக்கணம் உள்ளது சிறப்பு.
எல்லாக் காலத்திற்கும் ஏற்றவகையில் இலக்கணம் எழுத இந்த நன்னூலார், தொல்காப்பியர் போன்றவர்களுக்கு எவ்வாறு முடிந்தது? எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களுக்கு எல்லாம் வழிவிட்டு அதற்கு தீர்வும் வைத்துவிட்டுப்போயிருக்கிறார்கள்.
இன்றைய காலத்தின் நவீன தொடர்பாடல் முறைகளும் சாதனங்களும் எமது மொழிக்கு சவாலான விடயந்தான் எனினும் நாம் புதிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. நமது எழுத்துக்களை- எழுத்துப்பிழை, இலக்கணப்பிழையின்றி எழுதினாலே போதும்.
முடிந்தவரை பிழையின்றி எழுதுவதற்கு முயற்சியுங்கள், சரியாக எழுதமுடியாவிட்டால் கற்றுக்கொள்வோம்.

Wednesday, September 1, 2021

ஆபிரகாம் பண்டிதர்

 


Kutti Revathi

சில நாட்களுக்கு முன் அயல்நாட்டிலிருந்து ஒரு பெண் அழைத்திருந்தார். இசைத்துறையில் கோலோச்சுபவர். கர்நாடக இசையில் வல்லவர். அவர் குரலில் பணிவும் கனிவும் முதிர்ச்சியும் கலந்திருந்தன. ‘நான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த இசைத்துறையில் இயங்கிவருகிறேன். ஆனால், ஒரு போதும் ஆபிரகாம் பண்டிதர் பெயரையோ, கருணாமிர்தசாகரம் என்ற நூலையோ கேள்விப்பட்டதே இல்லை. ஏன் என்ற கேள்வி என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது’, என்றார். ஏன் என்ற இந்தக் கேள்வி நாமெல்லோரும் நம்மிடமும் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

இசையமைப்பாளர் ஏஆர்ரஹ்மான் ஃபவுண்டேஷனின் இணையத்தளத்தில், karunamirthasagaram.org என்ற இணையத்தளம் தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதரின் நூற்றாண்டை (1917 - 2017) ஒட்டித் தொடங்கப்பட்டுத் தீவிரமாக இயங்கிவருகிறது. தொடங்கிய ஓராண்டிற்குக் கிணற்றில் போட்ட கல் போல இருந்தது. தமிழிசைச் செயல்பாடுகள் ஓரளவில் சமூகத்தில் அந்நியமான ஒன்றாகவே இருந்து வருகிறது. இதை மீண்டும் மீண்டும் ஏஆர் ரஹ்மான் முடுக்கிவிடுவதற்கான எல்லா பணிகளையும் செய்துகொண்டே இருந்தார். சர்க்கார் திரைப்பட இசைவெளியீட்டில் ஷோபா சந்திரசேகர் அவர்களால் இந்த இணையத்தளம் பகிரங்கமாய் அறிவிக்கப்பட்டது.
இன்று இதன் பின்னணியில் தம் அடையாளம் பகிர விரும்பாதோர், ஆனால் தமிழிசை பால் பெருத்த அக்கறையும் ஈடுபாடும் கொண்டோர் கூட்டாக உழைக்கத் தொடங்கியிருக்கின்றனர். தமிழிசையின் வரலாற்றையும் அதன் முக்கியத்துவத்தையும் அறியாத நம்முடைய “அறியாமை” தான் எல்லா ‘ஏன்’, என்ற கேள்விகளுக்கும் ஒரே பதில் என்பேன்.
நாம் செய்யவேண்டியவை நிறைய:
1. மறைக்கப்பட்ட மறக்கப்பட்ட ஆபிரகாம் பண்டிதரை மீள் உருவாக்கம் செய்து உலக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே நம் தலையாய நோக்கம்.
2. மூவாயிரம் ஆண்டு தமிழிசை வரலாற்றையும் அகழ்ந்தெடுத்து உலக இசை ஆய்வாளர்களுக்கு வழங்குவதே இதன் உள்நோக்கம்.
3. ஆபிரகாம் பண்டிதர் பெயரில் தமிழிசைக்கான ஒரு பல்கலைக்கழகம் தொடங்கவேண்டும்.
4. ஆபிரகாம் பண்டிதர் பெயரில் தமிழிசைக்கான ஆய்வு நூலகம் தொடங்க வேண்டும்.
5. ஆபிரகாம் பண்டிதர் வாழ்க்கை குறித்தும் தமிழிசைக்கான தமிழிசைக்கருவிகள் மற்றும் தமிழிசையின் வரலாறு குறித்தும் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்.
6. சென்னை, தஞ்சை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஆபிரகாம் பண்டிதரின் சிலையுடன் கூடிய மணிமண்டபங்கள் நிறுவ வேண்டும்.
7. பிறந்த நாளும் மறைந்த நாளும் ஒன்று கூடும் ஆகஸ்ட் மாதத்தை தமிழிசை மாதமாகஆண்டுதோறும் கொண்டாட வேண்டும். தமிழிசைக் கச்சேரிகளுடன் உலகளாவிய இசைக்கச்சேரிகளும் இம்மாதத்திலே நடத்த வேண்டும்.
8. உயிர்காக்கும் அவருடைய சித்தமருந்துகளை மக்களுக்குச் சேரும் வகையில் மீண்டும் தயாரித்து வழங்க வேண்டும்.
9. ஆபிரகாம் பண்டிதர் மற்றும் அவரது தமிழிசை ஆய்வுகள் குறித்த ஆய்வு நோக்கில் உயரிய ஆவணப்படம் ஒன்றையும் எடுக்க வேண்டும்.
இவை எல்லாம் தனி மனிதரின் பணிகள் அல்ல. நாம் எல்லோரும் இணைந்து இயக்கவேண்டிய சமூகச் செயல்பாடுகள். இவற்றைச் செய்வதால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தமிழ் நாட்டில் சமூக அரசியலிடையே பெருத்த பண்பாட்டு மாற்றத்தை நம்மால் உருவாக்கமுடியும். உலக அளவில் தமிழரின் முத்திரை முனைப்பாக இருக்கும்.
தமிழிசையின் தந்தை ஆபிரகாம் பண்டிதரின் நினைவு நாளான இன்று உங்களையும் இந்த தமிழிசை இயக்கத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.
நன்றி!

Friday, March 26, 2021

மட்டக்களப்பின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை

ஈழத்தில் தமிழுக்கும் பெரும் பங்களிப்புச் செய்துள்ள மரபு வழித் தமிழ் புலமையாளர்களில் முக்கியமான ஒருவராகக் கொள்ளப்படவேண்டியவர் கிழக்கிலங்களையின் மட்டக்களப்பு மண்ணின் மைந்தரான புலவர்மணி பெரிய தம்பிப் பிள்ளை.

 

முத்தமிழ் வித்தகர் என்று போற்றப்பட்டவரும் “யாழ் நூல்” தந்த பெருமைக்குரியவரும், பல்கலைக்கழக நிலையில் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலானந்தரிடம் கல்விபயின்ற பெருமையும் இவருக்கு உண்டு. 

ஈழத்தில் இலக்கியரசனையை விரிவடையச் செய்தவர்களுள் முக்கியமானவரும் யாழ்ப்பாணத்தில் பண்டிதர்களுக்குப் பணடிதராகவும்: அதேவேளை நவீன உரைநடை இலக்கியத்தின் உரைகல்லாகவும் திகழ்ந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களுடனிணைந்து நாவலர் காவிய பாடசாலையில் கல்விபயின்று கவிஞராய் மேலெழுந்த சிறப்பும் இந்த புலவர் மணிக்குண்டு. 

மட்டக்களப்பின் மண்டூரில் 1899ஜனவரிமாதம் 8ஆம் திகதி பிறந்தவர் இவர். (08.01.1899) மண்டூர் வெஸ்லியன் தமிழ்ப் பாடசாலையில் ஆரம்பத் தமிழ்க் கல்வியையும், கல்முனை வெஸ்லி மிஷன் ஆங்கிலப் பாடசாலையில் ஆரம்பஆங்கிலக் கல்வியும் பெற்ற இவருக்கு “யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் தமிழ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

நாவலர் காவியப் பாடசாலை ஒரு தனித்தன்மை வாய்ந்த நிறுவனம்! அரசினால் வழங்கப்படுகின்ற நன் கொடையைப் பெறும் இப்பாடசாலை இதில் தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு நன் கொடைவழங்குவது வழக்கமாக இருந்தது. 

சுன்னாகம் அ. குமாரசாமிபுலவர், த.கைலாசப்பிள்ளை, பண்டிதர் மகாலிங்கசிவம், பண்டிதமணி நவநீத கிருஷ்ண பாரதியார், சாவகச்சேரி புலவர் பொன்னம்பலப்பிள்ளை, பண்டிதர் சோமசுந்தரம் என்று யாழ்ப்பாண அறிஞர் பலரின் நட்பும் தொடர்பும் ஆசிரியத்துவமும் இவரது கல்வியை உயர்த்தியுள்ளது. 

தமிழ் கல்விக்காக இவர் மட்டுநகரில் இருந்து யாழ் கூட்டிவந்த நண்பர் இவரை குருநகருக்கருகேயுள்ள மரகதமடம் என்ற இல்லத்துக்கு கூட்டிச் சென்றார். அங்கிருந்த இளைஞர் இவரை வரவேற்று உபசரித்துள்ளார். அந்த இளைஞர் வேறுயாருமில்லை! பண்டிதர் மயில்வாகனம் என்று பெயர் கொண்ட பிற்காலமுத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தரே தான். 

இந்த முதல் சந்திப்பை தன்னுடைய பிற்கால உள்ளதும் நல்லதும் என்ற நூலில் புலவர் மணி பதிவு செய்கின்றார். 

“யாழ்ப்பாணத்தில் வைத்து என் மீது அரும்பிய பண்டிதர் மயில் வாகனனாரின் அன்பு அவர் துறவியான பின்பு அருளாக மலர்ந்துள்ளதை நினைத்து நினைத்து நெஞ்சம் உருகி நின்றேன்.’ 

இந்த முதல் சந்திப்பின் பிறகு அவரைத் தேடிச் சென்று பலவிஷயங்களைக் கற்றுக் கொண்டார். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணக் கோவில்கள் அனைத்திலும் பண்டிதர் மயில் வாகனனாரின் பிரசங்கம் ஒலித்துக் கொண்டேயிருக்கும். புலவர் மணியும் விடாமல் அந்தப் பிரசங்கங்களைக் கேட்டு லயித்துக் கிடப்பார். அப்படி லயித்து லயித்தே நானும் பேசக்கற்றுக் கொண்டேன் பேச்சாளன் ஆனேன் என்றும் குறிக்கின்றார் இவர். 

விபுலானந்தரூடாகவே யோகர் ஸ்வாமியின் பழக்கமும் தொடர்பும் அருளாசியும் இவருக்குக் கிடைக்கிறது. 

பண்டிதர் மயில்வாகனனார் விவேகானந்த சபையின் நிரந்தரமாகிவிட்ட காலத்தில் புலவர்மணியும் நாவலர் பாடசாலையை விட்டு விலகி விவேகானந்த சபையுடன் இணைகின்றார். மாலைவேளைகளில் நல்லூர் கந்தசாமி கோவிலில் யோகர்ஸ்வாமியும் ஸ்வாமி விபுலானந்தரும் இவரும் திருப்புகழ் படிப்பதுண்டு. 

இவர் சாவகச்சேரி இந்து மகா சபையில் இருந்த போது இவரைத் தேடி சபைக்குவரும் அனைவருடனும் நட்புடனும் சமமாகவும் பழகினார். சாதிவெறி உச்சமடைந்திருந்த காலம் அது. 

இங்குவரும் பள்ளர் பறையருக்கெல்லாம் கதிரை கொடுத்து உபசரிக்கின்றீராமே? இந்த புரட்சிகள் எல்லாம் இங்கே வேண்டாம் என அவர்கள் கடிய பதிலுக்கு இவரும் கடிய, இவரை சபை விலக்கி வெளியேற்றுகிறது. இதனால் வேதனையும் விரக்தியுமுற்றுத் திரிந்த புலவர் மணியை ஆறுதல் வார்த்தைகள் கூறி ஆற்றுப்படுத்தியவர்கள் ஐசக் ‘தம்பையா,  எட்வர்ட் மேதர் போன்ற அமெரிக்கன் மிஷன் கிறிஸ்தவப் போதகர்கள்.‘இங்கே எங்களிடம் பள்ளரும் இல்லை பறையரும் இல்லை! மனிதர்கள் எல்லாரும் சமமானவர்கள். உங்கள் நோக்கம் நிறைவேற நீங்கள் எங்களுடன் இணைந்து செயற்படுங்கள்’ என்று கூறினர். 

புலவர்மணியும் மதம் மாறி கிறிஸ்துவரானார். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் ஆசிரியர் பதவியை விட்டு விலகி சாவகச்சேரி மிஷன் கல்லூரியில் தமிழ்பண்டிதராகப்பதவி ஏற்றார். கிறிஸ்தவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்குடன் திகழ்ந்த இவரை வேதசாஸ்திர கல்லூரியில் இரண்டு வருடப் படிப்பிற்காக இந்தியாவிலுள்ள பசுமலைக்கு அனுப்பிவைத்தார்கள். அமெரிக்க மிஷனின் அரண்போன்றது பசுமலை. 

‘கிறிஸ்து திருவவதார கீதங்கள்’ என்னும் சிறுபிரந்தம். ‘கிறிஸ்தவ சமய துயிலுணர்ச்சி’ என்னும் சிறு நூல், ‘இந்தியநோக்கில் கிறிஸ்தவ வேத வியாக்கியானம்’ என்னும் கட்டுரை போன்றவை பசுமலை காலத்தில் எழுதியவை. கிறிஸ்தவ சமயப் பிரசங்கியாக, பசுமலை. கோவை, சென்னை எனப் பிரபல்யம் கொண்டார். பசுமலை வேதசாஸ்திர கலாசாலை விடுதி மேற்பார்வையாளராகவும் செயற்பட்டார். ஆனாலும் கிறிஸ்தவமதமும் திருச்சபையும் ஒன்றாக செயற்படவில்லை என்ற உணர்வும், கிறிஸ்தவ சமூகத்தின் மேல்நாட்டு ஏகாதிபத்தியத்தைக் களைய வேண்டும் என்னும் வெறியு், கிறிஸ்தவ மேலைநாடுகளின் நோக்கங்கள் மீதான எதிர்ப்பும் இவரை அலைக்கழித்தன. பசுமலை பயிற்சி முடிந்து யாழ் திரும்பும்போது யாழ்ப்பாணத்தின் திருச்சபை செயலாளர் பதவி இவருக்காக ஒதுக்கப்பட்டுக் காத்திருந்தது. 

பசுமலையில் புலவர்மணி சமயப் பிரசங்கியாக செல்வாக்குடனிருந்த காலத்தில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் விபுலானந்தர் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். தன்னைக் கண்டு மனமுருகிநின்ற புலவர் மணியிடம் ‘மட்டக்களப்பில் அதிகம்வேலையுள்ளது. ஆட்கள் தேவை’ என்று கூறினாராம் விபுலானந்தர். 

இது நடந்தது 1925ல். பசுமலை கலாசாலைப் பதவிகள் தனக்கிருந்த செல்வாக்கு, யாழில் தனக்கென ஒதுக்கப்பட்டுக்காத்திருந்த உயர்பதவி அனைத்தையும் உதறிவிட்டு 1926ல் தனது தாயகமான மட்டக்களப்புக்கு வந்தார். 

திருகோணமலை, மட்டக்களப்பு என ஆசிரியப் பதவி வகித்து நல்மாணவர்களை உருவாக்கினார். 

ஈழநாட்டில் 20ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த புலவரும் தமிழ் அறிஞரும் சீர்த்திருத்த சிந்தனாவாதியுமான புலவர்மணி சிறியனவும் பெரியனவுமாக 15க்கும் கூடுதலான நூல்களை வெளியிட்டுள்ளார். 

முக்கியமாக பகவத்கீதைவெண்பா 1962 

புலவர் மணி கவிதைகள் 1980 

உள்ளதும் நல்லதும் 1982 

கருமயோகம் : பக்தியோகம் , ஞானயோகம், பாலைக்கலி, விபுலானந்தர் மீட்சிபத்து, புலவர்மணி கட்டுரைகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை. 

புலவர்மணி ஏ. பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் தனது 79ஆவது வயதில் 02.11.1978ல் மரணம் அடைந்தார். 

தெளிவத்தை ஜோசப்

http://www.vaaramanjari.lk/




 மட்டக்களப்பின் புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை அவர்களைக் கௌரவிப்பதற்காக, 1994 மே மாதம் 22 ஆம் தேதியன்று இலங்கை தபால் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட தபால் தலை! எனது சேகரிப்புகளில் ஒன்று... பழையவற்றைப் புரட்டியபோது இன்று கண்ணில் பட்டது!

Pathmanathan Mahadevah